Saturday, November 12, 2016

நட்சத்திர பரிகாரங்கள்: அசுவினி நட்சத்திரம்

ட்சத்திர பரிகாரங்கள்: அசுவினி நட்சத்திரம்
ஜோதிடர் - ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஜோதிஷண்முகம்
பறக்கை கிராமம்
குமரிமாவட்டம்

9629170821


பூமியில் பிறந்த மனிதர்களுக்கு அவர்கள் பிறந்த நேரத்தின் நட்சத்திரத்தை மையமாக வைத்தே ஆயுள் கால பலாபலன்கள் கணித்துக் கூறப்படுகிறது. நமது இந்திய வேத ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய வழிபாட்டு முறைகள் பரிகார வழிகள் பலவிதமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் முதல் வழி முறை அந்தந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகளை வழிபடுதல் ஆகும். அதன் படி அசுவினியில் பிறந்தவர்கள் அதன் அதிதேவதையாக சொல்லப்படும் சரஸ்வதி தேவியையும், தேவ மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களையும் அவர்களுக்குரிய காயத்திரி மந்திரங்களால் அன்றாடம் வழிபட்டு வாழ்வில் வெற்றியடையலாம். இரண்டாம் வழிமுறை நட்சத்திரங்களின் அதிபதியான கிரகங்களை வழிபடுதல் ஆகும். அதன் படி அசுவினியின் நட்சத்திர கிரகம் கேது ஆவார். எனவே அசுவினியில் பிறந்தவர்கள் கேது காயத்திரி மந்திரங்கள் சொல்லி அன்றாடம் கேதுவை வழிபட்டு நன்மை அடையலாம். மூன்றாம் வழிமுறை நட்சத்திரங்களின் குறீயீடுகளை தாந்த்ரீக முறையில் பயன்படுத்தி வழிபடுதல் ஆகும். அதன் மூலம் அசுவினியின் குதிரை வடிவத்தை தினமும் பார்த்து வருதல், குதிரை வடிவத்தை மோதிரம், டாலர்களில் பயன்படுத்துதல் இதன் மூலமும் நன்மை அடையலாம். இந்த எல்லா முறைகளையும் காலமாற்றத்திற்கு ஏற்றபடி ஜோதிடத்தின் நட்சத்திர தாராபலன்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்களும் தங்கள் 12 பாவங்களையும் நல்ல விதமாக இயக்குவது எப்படி என்று பார்க்கலாம். இராசி மண்டலத்தின் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்திற்கு மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளிலும் நட்சத்திரங்களின் தாரா பலன் அடிப்படையில் ஒரு சுப பலன் தரும் நட்சத்திரம் அமைந்து விடுவதைக் காணலாம்.

     அசுவினிக்கு அருகில் இருக்கும் சுப பலன் தரும் சம்பத்துத்தாரா நட்சத்திரங்கள் பரணி. பூரம். பூராடம் ஆகும். இவை முறையே மேஷ ராசிக்கு 1-5-9 என்ற திரிகோண ராசிகளில் வரும். 1-5-9 என்பது தாத்தா-அப்பா-மகன் என்ற பரம்பரை சுழற்சியைக் குறிக்கும் அல்லது கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்ற கால சுழற்சியைக் குறிக்கும். இவை மேஷ ராசிக்கு 1 என்பது ஜாதகர் என்ற நிகழ்காலம்.  5 என்பது பூர்வ புண்ணியம் என்ற கடந்தகாலம். 9 என்பது பிதுர் பாக்கியம் என்ற எதிர்காலம் இவற்றை சூட்சுமமாகக் குறிக்கும்.
     எனவே மேஷ ராசியில் அசுவினியில் பிறந்த ஜாதகர் பரணி நட்சத்திரத்தன்று தன் சுயபலத்தைப் பெருக்கிக்கொள்ளவும், வாழ்வில் முன்னோக்கி வெற்றி நடை போடவும், எடுத்த காரியம் வெற்றி பெறவும் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள அம்பிகை சன்னிதியில் பரணியின் ஆளுமை கொண்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றிவழிபடுதல், பரிஹார ஹோமங்கள் செய்தல், ஆலயத்திற்கு உண்டியல் உபயம் செய்தல், ஆலயத்தின் சமையல் கூடத்திற்கு தேவையான நெருப்பு மூட்ட உதவும் எரிபொருட்களை தானமளித்தல் இவற்றின் மூலம் வாழ்வில் வெற்றிகளை அடையலாம்.

     பூரம் நட்சத்திரத்தன்று தங்கள் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களை அடையவும், புத்திர சந்தான, மந்திர சித்திகள் கைகூடவும் தங்கள் ஊரில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்பிகைக்கு பூரத்தின் ஆளுமை கொண்ட பட்டாடை அணிவித்து தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும், பிரகாரத்தில் இருக்கும் தெய்வ சன்னிதிகளுக்கு பெயர் பலகை உபயம் செய்து கொடுப்பதன் மூலமும் நன்மை அடையலாம்.
     பூராடம் நட்சத்திரத்தன்று  பிதுர் பாக்கியங்களை அடையவும், உயர்கல்வியில் தேர்ச்சி பெறவும், பெரியமனிதர்கள் ,குருமார்கள் இவர்களின் ஆசீர்வாதங்களை அடையவும், எதிர்கால திட்டங்களில் வெற்றி பெறவும் தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்கள் அல்லது மடாலயங்களுக்கு சென்று பூராடத்தின் ஆளுமை கொண்ட ஆலய மற்றும் மடங்களின் மதில் சுவர்களுக்கு வண்ணம் பூசி பராமரித்தல், மதில்களில் இருக்கும் சிதிலங்களை சீர் செய்தல், அங்கு பணிபுரியும் குருமார்கள், மடப்பள்ளி பணியாளர்கள் இவர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்தல் இவற்றின் மூலம் நன்மை அடையலாம்.

     அசுவினிக்கு ஷேமம் என்ற குடும்ப நலம் தரும் ஷேமத்தாரா நட்சத்திரங்கள் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகும். இவை இடம் பெறும் ராசிகள் முறையே மேஷ ராசிக்கு 2-6-10 என்ற கர்மத்திரிகோண ராசிகளாக வரும். எனவே அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி நட்சத்திர நாளன்று தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று ரோகிணியின் ஆளுமை கொண்ட ஆலயத்தின் கருவறை விமான கோபுரத்தை வலம் வந்து தரிசனம் செய்வதாலும், ஆலயத்தில் உள்ள தெய்வ சன்னிதிகளுக்கு சிறு மணியை உபயமளிப்பதாலும், மூல தெய்வத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவதாலும் தனவரவைப் பெருக்கிக்கொள்ளலாம் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கலாம். ஜோதிடர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் நல்ல வாக்கு பலமும், ஜன வசியமும் ஏற்படும்.
ஹஸ்த நட்சத்திர  நாளன்று அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று அங்கு தங்களால் இயன்ற துப்புறவு பணிகளை செய்வதன் மூலமும், அங்கு துப்புறவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இயன்ற பண உதவி செய்வதன் மூலமும், ஆலயத்தின் துப்புறவு பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை உபயம் அளிப்பதன் மூலமும், ஹஸ்தத்தின் ஆளுமை கொண்ட நிறை நாழியை உபமளிப்பதாலும், ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து அவல், பொரி படைத்து வழிபட நோய்நொடிகள், கடன், வழக்குகள் இவற்றிலிருந்து தங்களை எப்போதும் காத்துக்கொள்ளலாம்.
திருவோண நட்சத்திர நாளன்று அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று ஆலயத்தின் தலைமை பூஜாரி அல்லது அர்ச்சகருக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தட்சிணை கொடுத்து அவரிடம் ஆசீர்வாதம் பெறுவதாலும், திருவோணத்தின் ஆளுமை கொண்ட சூலம், ஊதுபத்திகள், தீப்பந்தம், அடுப்பு எரிக்க உதவும் விறகுகள் இவற்றை உபயமளிப்பதாலும் செய்தொழில், வியாபாரம், உத்தியோகம் இவற்றில் நிலையான வருமானத்தையும் முன்னேற்றத்தையும் அடையலாம்.

     அசுவினிக்கு சாதகத்தாரை என்ற அற்புத சுப பலன் தரும் நட்சத்திரங்கள் திருவாதிரை, ஸ்வாதி, சதயம் ஆகும். இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் ராசிகள் மேஷத்திற்கு 3-7-11 என்ற ராசிகளாக வரும். எனவே அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள நடராஜர் சன்னதியில் திருவாதிரையின் ஆளுமை கொண்ட சாம்பிராணி தூபம் புகைத்தும், நெய்தீபம் ஏற்றியும், ருத்ராபிஷேகம் செய்தும், அம்பிகைக்கு குங்கும அபிஷேகம் செய்தும் வழிபட்டு வந்தால் வாழ்வில் எடுத்த காரியங்களில் தடையின்றி தொடர்  வெற்றிகளை அடையலாம்.

     ஸ்வாதி நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஸ்வாதியின் ஆளுமை கொன்ட மரக்கன்று நடுதல், அங்குள்ள விருட்சங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல், சிவலிங்கத்திற்கு பால், தயிர், நெய் என்ற அபிஷகப் பொருட்கள் வாங்கிகொடுத்தல், தீபம் ஏற்றி வழிபடுதல் இவற்றின் மூலம் இல்லறவாழ்வில் இன்பம் சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடைகள் விலகி விரைவில் திருமணம் கைகூடும். நல்ல நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் அமைவார்கள்.
சதயம் நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள மூலதெய்வத்திற்கும் தாயாருக்கும் சதயத்தின் ஆளுமை கொண்ட பூமாலைகள் அணிவித்து வழிபடுவதாலும், ஆலயங்களுக்கு தட்டு, தாம்பாளம், கைத்தாளம் இவற்றை உபயம் அளிப்பதாலும், பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் காகித தட்டுகளை உபயம் அளிப்பதாலும், ஆலயத்தில் பூந்தோட்டங்கள் அமைத்துக் கொடுப்பதாலும், ஆலயத்தின் கிணறுகள், பூந்தோட்டங்கள் இவற்றைப் பராமரிப்பதாலும், வாழ்வில் எல்லா ஆசைகளும் நிறைவேறும். நல்ல எண்ணங்கள் எல்லாம் விரைவில் செயல்களாகி செயல்களில் வெற்றியும் பலனாக கிடைக்கும்.
அசுவினிக்கு மைத்திரம் என்ற நட்பு தாரா பலன் தரும் நட்சத்திரங்களாக வரும் பூசம், அனுஷம், உத்ரட்டாதி இவை அனைத்தும் மேஷத்தின் 4-8-12 ராசிகளில் வருவதால், அசுவினியில் பிறந்தவர்கள் பூசம் நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூசத்தின் ஆளுமை கொண்ட பாலபிஷேகம், 108/1008 சங்கு அபிஷேகம், புஷ்பார்ச்சணைகள் செய்வதாலும், பசுக்களுக்கு தேவையான புல், இலை, தளைகள் ,தீவணங்கள் வாங்கி கொடுப்பதாலும், கோசாலைக்கு இயன்ற சேவைகள், பண உதவிகள் செய்வதாலும், மடப்பள்ளியில் நைவேத்யத்திற்குத் தேவையான பால், நெய், தயிர், இவற்றை வாங்கிக் கொடுப்பதாலும், நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவதாலும் வீடு, நிலம், வாகனம், கல்வி இவற்றில் சிறப்பான முன்னேற்றம் அடையலாம்.
அனுஷ நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அனுஷத்தின் ஆளுமை கொண்ட தாமரைமலர் கொண்டு மூலவரையும் தாயாரையும் ஒருசேர வழிபடுவதாலும், கருவறையில் இருக்கும் தொங்கு விளக்கில் எண்ணெய் சேர்ப்பதாலும், ஆலயத்திற்கு முத்துகுடை தானம் அளிப்பதாலும், ஆலயத்தில் இருக்கும் கழிவுநீர் ஓடைகளை ஒழுங்காகப் பராமரிப்பதாலும், தீராத நோய்கள், நாட்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஆயுள் அரோக்யம் பெருகும். வாழ்வில் ஏற்பட்ட அவமானங்கள் விலகி சமூகத்தில் கெளரவமான நிலை திரும்பும்.

     உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று உற்சவ மூர்த்திகளாக இருக்கும் தெய்வங்களின் சன்னிதியில் தூபம், தீபம், சமர்பித்து அவர்களுக்கு மரிக்கொழுந்து பச்சிலை சாத்தி வழிபட்டு வருவதாலும் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுப்பதாலும், தண்ணீர்க் குழாய் கசிவுகளை சரி செய்து கொடுப்பதாலும்  தேவையற்ற  செலவுகளைத் தவிர்க்கலாம்.
அசுவினிக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி என்ற நட்சத்திரங்கள் பரம மைத்திர தாரா பலன் தரும் என்பதாலும் இவை மேஷ ராசிக்கு 4-8-12 ராசிகளில் வரும் என்பதாலும், அசுவினியில் பிறந்தவர்கள் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள மூலவருக்கு ஆயில்யத்தின் ஆளுமை கொண்ட புதுப்பூணூல் அணிவிப்பதாலும், பட்டுத்துண்டு அணிவிப்பதாலும், ஆலயத்திற்கு விளக்குத்திரிகள் உபயம் அளிப்பதாலும், வீடு, கல்வி, சொத்து தொடர்பாக அனுகூலமான பலங்களை அடையலாம்.
கேட்டை நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள கொடிமரத்தில் இருக்கும் அட்டத்திக்கு பாலகர்களை வலம் வந்து கொடிமரத்தை வணங்குவதாலும், ஆலயத்தில் காவல் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு இயன்ற பொருள் உதவி செய்வதாலும், ஆலயத்தின் காவல் தெய்வங்களுக்கு வேல், சூலாயுதம், ஈட்டி போன்ற ஆயுதங்களை உபயம் அளிப்பதாலும் வாழ்வில் எதிர்பாராத ஆபத்துக்களிலிருந்தும் நஷ்டங்களிலிருந்தும் கண்டங்களிலிருந்தும் காத்துக்கொள்ளலாம்

     ரேவதி நட்சத்திர நாளன்று ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள ஆலய தெப்பக்குளம் அல்லது ஊருணியில் வாழும் மீன்களுக்கு பொறி மற்றும் அரிசி உணவுகளை அளித்து வந்தால் வெளி நாட்டுத்தொடர்புகள் மூலம் வாழ்வில் முன்னேற்றங்கள் வரும். முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். ஆலயத்தில் காலணிகளை பாதுகாக்கும் பணியில் இருப்போர்களுக்கு இயன்ற பொருள் உதவிகள் செய்து வந்தால் வெளி நாட்டு வேலைப் பயணங்கள் கைகூடும். தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். வீட்டை விட்டுப் பிரிந்த உறவினர்கள் திரும்புவார்கள்.

     மேஷ ராசிக்கு 5மிடம் சூரியனின் வீடான சிம்மம் என்பதால் சூரியனுக்கு அதிதேவதை சிவபெருமான் என்ற அடிப்படையில் மேஷ ராசி அன்பர்கள் சிவாலயத்தில் வழிபாடு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது விதி. இப்படி அசுவினியில் பிறந்தவர்கள் நட்சத்திரங்களின் தாராபலம் அறிந்து இதுபோன்ற உரிய வழிபாடுகள், பரிகாரகங்களை உரிய நாளில் செய்து வந்தால் எல்லா நலமும் வளமும் சேரும்.


No comments:

Post a Comment